வாஷிங்டன்,
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான உய்குர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் இந்த மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. சீன அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர் இன மக்கள் அங்குள்ள, வதை முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர்.
சீனாவின் பீஜிங் நகரில் வருகிற 2022ம் ஆண்டு பிப்ரவரி 4 முதல் 20ந்தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில், சீனாவின் இனப்படுகொலையை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உய்குர் இன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 11 லட்சத்துக்கும் அதிகமானோர் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கிடக்கின்றனர். உய்குர் இன பெண்களின் தலைமுடியை வெட்டி அவற்றை வெளிநாடுகளுக்கு அழகுசாதான பொருள்களாக சீனா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பலர் கொத்தடிமை போல வேலை பார்க்கின்றனர் என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.
சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினரான உய்குர் முஸ்லிம்கள் சீனாவின் தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரானதான முதல் முறை முயற்சியாகும்.
இதேபோன்று, சீனாவில் சிறுபான்மையின முஸ்லிம் வகுப்பினர்களுக்கான உரிமை குழுவானது, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்டில், ஒலிம்பிக் கமிட்டிக்கு அனுப்பிய புகாரொன்றில், உய்குர் மற்றும் பிற துருக்கி சமூக முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தல் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுதல் ஆகியவற்றிற்கான வெளிப்படையான சான்றுகள் உள்ள நிலையில், 2022ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை சீனாவில் நடத்துவது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தது.
டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசும், மனிதகுல எதிர்ப்பு செயல்களுக்கு சீன கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தது.
அமெரிக்காவை தொடர்ந்து, கடந்த மாதம் கனடா அரசு உய்குர் சிறுபான்மை சமூக மக்களை சீனா இனப்படுகொலை செய்கிறது என கூறியது.
இதேபோன்று கடந்த பிப்ரவரியில், உய்குர் சிறுபான்மை சமூக மக்களை இனப்படுகொலை செய்து வருகிறது சீனா என்று நெதர்லாந்து நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளில் முதல் நாடாக நெதர்லாந்து இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றவாதியான மைக்கேல் மெக்கால், ஹட்சன் மையத்தில் இருந்து மெய்நிகர் காட்சி வழியே பேசும்பொழுது, உய்குர், பிற பழங்குடி மற்றும் மதம் சார்ந்த சிறுபான்மையின மக்களுக்கு எதிராக சீன கம்யூனிஸ்டு கட்சி நடத்தி வரும் மனித உரிமை மீறல்கள் ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி உள்ளது.
10 லட்சம் பேரை முகாம்களில் அடைத்து சித்ரவதை செய்து வருகிறது. உலகம் முழுவதும் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகிறது என நாம் காண்கிறோம். ஆனால், சீனாவில் நிலைமை படுமோசம் என நான் நினைக்கிறேன்.
தனது சொந்த மக்களையோ கொடுமைப்படுத்தும் சீனாவில் ஒலிம்பிக் நடத்தப்படுவதற்கு பதில் வேறு ஏதேனும் இடத்திற்கு மாற்றப்பட வேண்டியது பற்றி நாம் யோசிக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது என பேசியுள்ளார்.
எனினும், பீஜிங் ஒலிம்பிக்கை புறக்கணிக்கும் எந்தவொரு நாட்டுக்கும் சீனா தீவிர தடை விதிக்கும் என குளோபல் டைம்ஸ் செய்தி இதழில் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டு உள்ளது.