அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் கோவிலின் அனைத்து கட்டுமானப் பணிகளும் வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என்று கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திரா மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற இரு நாள் கட்டுமானக் குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் எல்அன்டி மற்றும் டாடா கன்சல்டன்சி நிறுவனங்கள், ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்களின் பணிகளை முழுமையாக முடித்து கோவில் வளாகத்தை விட்டு வெளியேற உள்ளதாக அவர் கூறினார்.
அதே நாளுக்குள் அனைத்து ஆவணப் பணிகள் மற்றும் பில் கட்டண நடைமுறைகள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கட்டுமானப் பணிகளுக்கு மூன்று ஆண்டுகள் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்காக இரு நிறுவனங்களின் சிறிய குழு மட்டும் தொடர்ந்தும் பணியில் இருக்கும் என்றும் கூறினார்.
ஏப்ரல் 30க்கு பின்னர், அனைத்து ஒப்பந்தங்களும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுமானத்திற்கு மொத்தமாக ரூ.1,900 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஜிஎஸ்டி உட்பட ரூ.1,600 கோடி தொகை ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளதாக நிருபேந்திரா மிஸ்ரா தெரிவித்தார்.