செய்திகள் • October 24, 2018

சிபிஎஸ்இ பள்ளிகள் அங்கீகாரத்தில் புதிய சீர்திருத்தங்களை செய்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்

புதிய தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான அங்கீகாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் புதிய சீர்திருத்தங்களை அறிமுகம் செய்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 18ம் தேதி புதுடெல்லியில் சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகை தகவல் மைய மண்டபத்தில் உரையாற்றிய போது இதைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பெரிய மாற்றம், முழு செயல்முறையையும் ஆன்லைனில் கொண்டுவந்து வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்கான வழிவகை ஆகும். பத்திரிகையாளர் சந்திப்பில் பிரகாஷ் ஜவடேகர் கூறும்பொழுது, இந்தியாவில் தற்போது 20,700 பள்ளிகள் சி.பி.எஸ்.இ. உடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் ஒவ்வொரு வருடமும் புதிதாக 2000 முதல் 2500 விண்ணப்பங்கள் வருவதாகவும் கூறினார். சிபிஎஸ்இ பள்ளி அங்கீகாரத்துக்கான தடையில்லா சான்றிதழ் வழங்க முன்பு மாநில கல்வி வாரியம் மற்றும் மத்திய கல்வி வாரியம் என்ற இரண்டு படிநிலைகளின் மூலம் வழங்கப்பட்டு வந்தது. தற்போதய சீர்திருத்தத்தின் மூலம் பள்ளிகளின் உள்கட்டமைப்பு சோதனைக்கான முழு அதிகாரத்தையும் மாநில கல்வி வாரித்திடமே வழங்கப்பட்டு விட்டது. இதன் மூலம் நேரம் வீணாவது தவிர்க்கப்படுவதுடன் கல்வி நிறுவன அங்கீகாரத்தில் மாநில அதிகாரம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இனி சிபிஎஸ்இ கற்றல் தொடர்பான அங்கீகாரத்தில் மட்டுமே ஆய்வு செய்யும். தற்போது 8000 பள்ளிகளுக்கான அங்கீகாரம் நிலுவையில் உள்ளது. இவற்றில் சில கடந்த 2007ம் ஆண்டு முதலே நிலுவையில் உள்ளது. தற்போது இதில் 2000 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது பள்ளிகள் அங்கீகாரத்திக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிபிஎஸ்இ பள்ளி அங்கீகாரத்தில் இனி கால தாமதம் முற்றிலும் தவிர்க்கப்படும். பிரகாஷ் ஜவடேகர் மேலும், மாணவர்கள் சீருடைகள் மற்றும் புத்தகங்களை குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே வாங்க வற்புறுத்தக் கூடாது என்று பள்ளிகளை எச்சரித்துள்ளார்.

Open full site