அரசு டாக்டர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசாணை எண் 354 அமல்படுத்தப்படாததால் அரசு டாக்டர்கள் நான்கரை ஆண்டுகளாக போராடி வருவதாக அவர் கூறினார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய அரசு டாக்டர்களுக்கு இன்று உரிய ஊதியமும், DACP ஊதியமும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார். போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை கைது செய்வதும், பணியிட மாற்றம் செய்வதும் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்தார்.
கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு டாக்டர் விவேகானந்தன் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கப்படவில்லை என்றும், போராட்டத்தில் உயிரிழந்த டாக்டர் மணிக்குமார் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.
அரசு டாக்டர்களின் நலன் பாதுகாக்கப்படாவிட்டால், தமிழக மக்களின் ஆரோக்கியமே பாதிக்கப்படும் என எச்சரித்த அவர், உடனடியாக அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தினார்.