செய்திகள் • January 02, 2026

ஜெர்மனியில் தீ விபத்து: சங்கராந்திக்கு சொந்த ஊர் வர இருந்த இந்திய மாணவர் உயிரிழந்தார்

பெர்லின்: ஜெர்மனியில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் உள்ள ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலம், ஜன்கான் மாவட்டம் மல்காபூரைச் சேர்ந்த தோக்லா ஹிர்திக் ரெட்டி (25) என்பவர், சங்கராந்தி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வர இருப்பதாக குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கொண்டாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த குடியிருப்பில் தீப்பிடித்துள்ளது.

தீயிலிருந்து தப்பிக்க முயன்ற போது, தோக்லா ஹிர்திக் ரெட்டி மாடியிலிருந்து கீழே குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தலை உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மத்திய வெளியுறவு அமைச்சகத்தை அணுகி உள்ளனர். மாணவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Open full site