புதுடில்லி :
இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே, நீண்ட 18 ஆண்டுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் உற்பத்தி, சேவை மற்றும் வேளாண் துறைகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், இந்தியப் பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தைகளில் எளிதான அணுகலை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
ஐரோப்பிய யூனியனில் இந்தியாவின் முதலீடு தற்போது 40 பில்லியன் யூரோக்களை எட்டியுள்ளதாகவும், ஆராய்ச்சி, உற்பத்தி, சேவை உள்ளிட்ட துறைகளில் இரு தரப்புக்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு நிலவி வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜவுளி, ரத்தினக் கற்கள், நகைகள், வாகன உதிரிபாகங்கள், என்ஜினியரிங் பொருட்கள் உள்ளிட்ட இந்தியப் பொருட்கள் ஐரோப்பிய சந்தைகளில் அதிக அளவில் இடம்பிடிக்கும். அதேபோல் பழங்கள், காய்கறிகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் கடல்சார் பொருட்களுக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகும்.
இதனால் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சேவைத்துறையினர் நேரடியாகப் பயனடைவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பம், கல்வி, பாரம்பரிய மருத்துவம் மற்றும் வர்த்தக சேவைகள் துறைகளுக்கும் இந்த ஒப்பந்தம் முக்கிய ஆதரவாக அமையும் என்றார்.
உலகளாவிய வர்த்தக சூழல் வேகமாக மாறிவரும் இந்நேரத்தில், இந்த ஒப்பந்தம் வணிக உலகிற்கு தெளிவான மற்றும் எதிர்காலத்தை நோக்கிய செய்தியை வழங்குவதாகவும் அவர் கூறினார்