பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் ஷெஹ்சாத் நகர் பகுதியில் அமைந்துள்ள மத வழிபாட்டுத்தலத்தில் நடைபெற்ற திடீர் குண்டுவெடிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஏராளமானோர் முன்னிலையில் நிகழ்ந்த இந்த வெடிப்பில், சம்பவ இடமே புகைமண்டலமாக மாறியது.
வெடிப்பின் தாக்கத்தில் பலர் தூக்கி வீசப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அலறியபடி துடித்த நிலையில், தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலில் இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 169 பேருக்கு மேல் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்த பயங்கரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்காத நிலையில், தெஹ்ரிக்-இ-தாலிபன் இயக்கத்தின் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பை தொடர்ந்து அந்த பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.