செய்திகள் • March 06, 2026

கோயில் நில விவரங்கள் இணையத்தில் வெளியிட வேண்டும்: உயர்நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு உத்தரவு

மதுரை: தமிழ்நாட்டில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் விவரங்களை பொதுமக்கள் எளிதில் அறியும்படி அறநிலையத்துறை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் காதப்பாறையில் செயல்படும் ஒரு கல்வி அறக்கட்டளை, வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தை பள்ளியின் விளையாட்டு மைதானமாகவும், திருமண மண்டபத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்தி வந்தது. அந்த நிலத்தை சட்டபூர்வ வாரிசுகளிடமிருந்து உள்குத்தகையாக பெற்றதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அறநிலையத்துறை இணை கமிஷனர் அந்த நிலத்திற்கான குத்தகைத் தொகையை உயர்த்த உத்தரவிட்டார். இதற்கு எதிராக, முன் அறிவிப்பு இல்லாமல் குத்தகை தொகை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என கூறி கல்வி அறக்கட்டளை நிர்வாகம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அறநிலையத்துறை சட்டப்படி கமிஷனரின் அனுமதி இல்லாமல் கோயில் நிலத்தை 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விட முடியாது என்று குறிப்பிட்டார். மேலும் அரசின் முன் அனுமதி இல்லாமல் 30 ஆண்டுகளுக்கு உள்குத்தகை வழங்கப்பட்டதால் அந்த ஒப்பந்தம் செல்லுபடியாகாது என்று தெரிவித்தார். இதனால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கு எதிராக கல்வி அறக்கட்டளை மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை நீதிபதிகள் பி. வேல்முருகன் மற்றும் பி. புகழேந்தி அமர்வு விசாரித்தது.

நீதிமன்றம் தனது உத்தரவில், மனுதாரர் பயன்படுத்தி வரும் நிலம் மத நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், அதற்கு எந்த சட்டபூர்வ குத்தகையும் இல்லாமல் அந்த நிலம் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டது. இதனால் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் நீதிமன்றம் முக்கியமான வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது. கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் பரப்பளவு, குத்தகை காலம், குத்தகைதாரர்கள் மற்றும் குத்தகைத் தொகை போன்ற விவரங்களை அறநிலையத்துறை தனது இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தகவல்கள் பொதுமக்கள் எளிதில் பெறக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அந்த நிலங்களில் ஆர்வம் உள்ளவர்கள் பொது ஏலத்தில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் கோயில்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

மேலும் அறநிலையத்துறை சட்ட விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், கோயில் சொத்துக்கள் பொதுஏலம் மூலம் மட்டுமே குத்தகைக்கு விடப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. தற்போதைய வழக்கில் உள்ள நிலத்தை மனுதாரரிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Open full site