புதுடில்லி: ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ரபேல் போர் விமானங்கள் “ஒரு ஹீரோ போல” செயல்பட்டதாக இந்திய விமானப்படையின் துணைத் தலைவர் ஏர் மார்ஷல் நாகேஷ் கபூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ரபேல் விமானங்களின் திறன் மற்றும் செயல்திறன் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. ரபேல் விமானம் துல்லியமான தாக்குதல் திறன், மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
நவீன மற்றும் அடுத்த தலைமுறை போர் விமானங்களைக் கொண்டு இந்திய ஆயுதப்படைகளை வலுப்படுத்துவது முன்னுரிமையாக உள்ளது. ரபேல் அல்லது வேறு எந்த மேம்பட்ட போர் விமானமாக இருந்தாலும், இந்திய விமானப்படையில் மேலும் பல விமானங்களை இணைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.
114 கூடுதல் ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்திற்கு இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் விரைவில் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இதுகுறித்து இன்னும் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த முடிவு அமல்படுத்தப்பட்டால், இந்திய விமானப்படையின் தாக்குதல் திறன் மற்றும் பாதுகாப்பு திறன் மேலும் வலுப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.