சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற 76வது குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தமிழக அரசு சார்பில் காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெற்ற இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலர், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்த ஆளுநர் ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.
முப்படைகள், தமிழக காவல்துறை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவியர் அணிவகுப்பு, அரசுத் துறைகளின் அலங்கார ஊர்திகள் ஆகியவை விழாவை சிறப்பித்தன.
மேலும் தமிழக மற்றும் வெளிமாநில கலைஞர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன.