மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி, பவுர்ணமி தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றனர்.
முருக பக்தர்கள் பேரவை, ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் இந்த கிரிவலத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. வழக்கமாக பவுர்ணமி நாளில் நடைபெறும் கிரிவலத்தில் இந்த முறை அதிகமான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கலந்து கொண்டனர்.
பா.ஜ. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ. மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில செயலர் கதலி நரசிங்கபெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல் ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராமரவிக்குமார், வி.எச்.பி., அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலர் ராமலிங்கம், ஹிந்து ராஷ்ட்ரிய சபா மாநில தலைவர் கிருஷ்ண குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முருக பக்தர்கள் பேரவையினர் தனியாக கிரிவலத்தில் பங்கேற்று, ஒரு லட்சம் பக்தர்களுக்கு ருத்ராட்சம் இலவசமாக வழங்கினர். கிரிவலத்தின் போது பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.