செய்திகள் • February 25, 2026

த.வெ.க. விருப்ப மனுக்கள்: திரும்பிய எண்ணிக்கை வெளியிடாததால் நிர்வாகிகளில் அதிருப்தி

சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, த.வெ.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்காக கடந்த 6ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டன. அவற்றை பூர்த்தி செய்து 20ஆம் தேதிக்குள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால், மனுவை சமர்ப்பிக்கும் போது ரூ.10,000 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விவரம் ஆரம்பத்தில் பலருக்கும் தெரியாமல் போனதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த தகவல் வெளிவந்ததும், பலர் மனு தாக்கல் செய்யாமல் விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், சில தொகுதிகளில் 20 மனுக்கள் கூட முழுமையாக திரும்பி வராத நிலை ஏற்பட்டதாக நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

முதல் நாளிலேயே 10,000 விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சுமார் 4,700 மனுக்கள் மட்டுமே திரும்பி வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாததும், கட்சியினரிடையே சந்தேகத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

விருப்ப மனுக்களின் சரியான எண்ணிக்கையை தலைமையகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Open full site