தமிழக டிஜிபி நியமனம்: ஒரு வாரத்தில் பெயர் பட்டியல் அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி: தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமன விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, வெங்கட்ராமன் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருந்தார். இதை எதிர்த்து கிஷோர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவில், சுப்ரீம் கோர்ட் முன்பு வழங்கிய உத்தரவின்படி நிரந்தர டிஜிபி நியமனம் செய்யாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என தெரிவிக்கப்பட்டது.
விசாரணையின் போது, தமிழக அரசு சார்பில் டிஜிபி பதவிக்கான பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன என்றும், யுபிஎஸ்சியில் சில நிர்வாக சிக்கல்கள் நிலவுகின்றன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், டிஜிபி தேர்வு செய்பவர் சட்டம் ஒழுங்கு, உள்துறை உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை குறித்து கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் முக்கிய உத்தரவை வழங்கினர். தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமன குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் இடம்பெற வேண்டும். அதில் ஒருவர் தலைமை செயலாளர்; மற்றொருவர் டிஜிபி இல்லாதபட்சத்தில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஆக இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், குறிப்பிட்ட நான்கு பிரிவுகளில் 10 ஆண்டு அனுபவம் என்ற விதி தமிழகத்திற்கு தளர்த்தப்படுகிறது எனவும் கூறினர். புதிய டிஜிபி பதவிக்கான பெயர் பட்டியலை ஒரு வாரத்திற்குள் யுபிஎஸ்சிக்கு தமிழக அரசு அனுப்ப வேண்டும் என்றும், அதன் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் யுபிஎஸ்சி தேர்வு செய்து பெயரை மாநில அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவு தமிழகத்தில் நிரந்தர டிஜிபி நியமன செயல்முறையை விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது