சமவேலைக்கு சம ஊதியம் கோரி 6வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் அருகே, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காந்தி இர்வின் சாலை பகுதியில், மேம்பாலத்தின் ஒருபுறத்தில் அமர்ந்து, ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு வர முயன்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
போராட்டத்தின் போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைநிலை ஆசிரியர்களை சந்தித்த புகைப்படத்தை துண்டு பிரசுரமாக வெளியிட்டனர். அதில்,
“கரம் பிடித்து சொன்னீர்களே, கண்ணீர் துடைப்பேன் என்று; காத்திருக்கிறோம், எப்போது வருவீர்கள் எங்கள் முதல்வரே”
என்ற வாசகத்தை அச்சிட்டு, அதை கையில் ஏந்தி ஆசிரியர்கள் அரசை வலியுறுத்தினர்.
இந்த போராட்டம் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.