காதலும் காமமும் ஆறறிவற்ற விலங்குகளும் செய்வதுதானே?
பொள்ளாச்சி குற்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்களே தயவுசெய்து இதைப் படியுங்கள்
இளம்பெண்களே, நீங்கள் உங்கள் ஆண் நண்பர்கள் மேலிருந்த அசட்டுத்தனமான நம்பிக்கையால் பாதிக்கப்பட்டீர்கள். அதற்காக சாய்ந்து விடாதீர்கள்; சரிந்து விடாதீர்கள், மனம் குமையாதீர்கள் வாழ்க்கை அஸ்தமித்ததென்று கொஞ்சமும் நினைக்காதீர்கள்.
இதிலிருந்து பாடம் எடுத்துக் கொள்ளுங்கள். " இனி என் வாழ்க்கை தடம்மாறி போய்விடாமல், நான் வாழ்வேன் " என்று சூளுரைத்துக் கொள்ளுங்கள்.
காதலும் காமமும் ஆறறிவற்ற விலங்குகளும் செய்வதுதானே? கல்வியும் அறிவும் மட்டுமே நமக்கு பெருமை! பெண்களே, கல்வியால் முன்னேறுங்கள்! நல்ல வேலை/தொழிலில் அமருங்கள்; தன்னம்பிக்கை பெண்மணியாய் மாறுங்கள்!
வாய்ப்பு கிடைத்தால் போலீஸ் பணியில் சேருங்கள், பெண்கள் போகப்பொருள் என்று மட்டுமே நினைக்கும் அயோக்கிய ஆண்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனையை பெற்றுத்தாருங்கள்.
என் தங்கைகளே நீங்கள் பெற்றேடுக்கும் ஆண் குழந்தைகளிடம் ஒழுக்கத்தை கற்று கொடுங்கள், பெண் பிள்ளைகளை போற்ற கற்று கொடுங்கள். உங்கள் பெண் குழந்தைகளை நல்லது-கெட்டது, ஆபத்தை உணரும் அறிவின் சுடராய் வார்த்தெடுங்கள்.

இளம்பெண்களே! நாங்கள் உங்களோடு இருக்கிறோம். உங்களை பரிவுடன் நேசிக்கிறோம், வாழ்க்கை நீண்டது; உலகம் பெரிது. உங்களால் வாழ்க்கையில் பெரிய வெற்றி பெற முடியும்! இனி அதை மட்டுமே நினையுங்கள், சரியான பாதையில் வாழ்ந்து காட்டுங்கள்.