கடும் பனிப்பொழிவு தாக்கம்: ஹிமாச்சலில் 1,250 சாலைகள் மூடல் – சுற்றுலா பயணிகள் தவிப்பு
சிம்லா:
ஹிமாச்சல பிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, மாநிலம் முழுவதும் சுமார் 1,250 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மணாலி, கின்னோர், லாஹவுல்-ஸ்பிட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் பல கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்ற காட்சிகள் காணப்பட்டன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு பதிவாகி வருவதால், சாலைப் போக்குவரத்தை தொடர முடியாத சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங் கூறுகையில், மாநிலம் முழுவதும் பனி அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் மூலம் சாலைகள் சுத்தம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், சிக்கித் தவிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பனிப்பொழிவு தொடர்ந்தாலும், ஹிமாச்சல பிரதேசத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.