அமெரிக்க அச்சுறுத்தல் காரணமாக ஈரான் போர்க்கப்பலுக்கு இந்தியா பாதுகாப்பு அடைக்கலம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் கடற்படைக்கு எதிராக தாக்குதல்களை அதிகரித்துள்ள நிலையில், ஈரான் தனது போர்க்கப்பல்களுக்கு பாதுகாப்பு தேடி பல நாடுகளிடம் உதவி கோரியுள்ளது.
அண்மையில், இந்தியாவில் இரண்டு நாள் கடற்படை பயிற்சியை முடித்து தாயகத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் ‘டீனா’ என்ற போர்க்கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் சுமார் 87 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மற்றொரு ஈரான் போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.என்.எஸ். புஷெர்’ கப்பலுக்கு இலங்கை தனது கடல் எல்லைக்குள் பாதுகாப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், ஈரான் அரசின் கோரிக்கையின் பேரில், அந்நாட்டு கடற்படைக்கு சொந்தமான ‘லவன்’ என்ற கப்பலை கொச்சி துறைமுகத்தில் நிறுத்த இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பிப்ரவரி 28 ஆம் தேதி சர்வதேச கடற்படை ஆய்வுக்காக வந்த இந்த கப்பலில் அவசர தொழில்நுட்ப கோளாறு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளது.
மார்ச் 1 ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மார்ச் 4 அன்று ‘லவன்’ கப்பல் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்தது. அந்த கப்பலில் இருந்த 183 பணியாளர்கள் தற்போது கொச்சி துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சர்வதேச அரசியல் சூழ்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.