சோகோட்ரா தீவில் சிக்கிய இந்தியப் பெண் சவூதி வழியாக மீட்பு – இந்தியா பாதுகாப்பாக திரும்பினார்
ஏமனின் சோகோட்ரா தீவில் சிக்கித் தவித்த இந்தியப் பெண் ரக்கி கிஷன் கோபால், சவூதி அரேபியா வழியாக வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டு இன்று (ஜனவரி 8) இந்தியா வந்தடைந்தார்.
ஏமனில் சவுதி ஆதரவு அரசுப் படைகளுக்கும், அமீரகத்துடன் தொடர்புடைய பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக சோகோட்ரா தீவுக்கான விமானச் சேவைகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதனால் ரக்கி கிஷன் கோபால் உட்பட சுமார் 400 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அங்கு பல வாரங்களாக சிக்கித் தவித்தனர்.
இந்த நிலையை தொடர்ந்து, ஏமனில் உள்ள இந்திய தூதரகத்தின் தலையீட்டின் மூலம் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து இந்திய தூதரகம் எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தகவல் கிடைத்தவுடன் ரக்கி கிஷன் கோபாலை ஏமனியா ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம் மூலம் சோகோட்ரா தீவிலிருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளது.
ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அவரை வரவேற்று, இந்தியா திரும்புவதற்கான உடனடி ஏற்பாடுகளை செய்தனர். அதன் தொடர்ச்சியாக அவர் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளார் என தூதரகம் தெரிவித்துள்ளது.