Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 08 Jan 2026

சம்பளம் பிடித்தாலும் போராட்டம் வாபஸ் இல்லை – இடைநிலை ஆசிரியர்கள் அறிவிப்பு

கோவை:
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி கோவையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, ஜனவரி 5ஆம் தேதி முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடங்கினர்.

அரசு தரப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த ஆசிரியர்கள் முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில், பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கூறுகையில், “நாங்கள் தற்போது பெற்று வரும் ஊதியமே மிகவும் குறைவாக உள்ளது. அந்த ஊதிய முரண்பாட்டை களையவே போராடி வருகிறோம். சம்பளம் பிடித்தம் செய்தாலும், எங்கள் வாழ்வாதார கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்” என தெரிவித்தனர்.

மேலும், 75 சதவீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் முழக்கங்கள் ஓயாது என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

இந்த தொடர் போராட்டத்தின் காரணமாக மாவட்டத்தில், குறிப்பாக இராசிரியர் பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் மட்டுமே மாணவர்களை கவனிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்