கர்நாடகாவில் மீண்டும் பைக் டாக்சி சேவை : உயர் நீதிமன்றம் தடையை நீக்கியது
கர்நாடகாவில் கடந்த ஆண்டு பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தடை செய்யப்பட்டிருந்த பைக் டாக்சி சேவைக்கு, உயர் நீதிமன்றம் தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது. ஓலா, ஊபர், ராபிடோ போன்ற நிறுவனங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிமன்றம், தனி நீதிபதி வழங்கிய தடையுத்தரவை ரத்து செய்தது.
பெங்களூரு போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில், குறைந்த செலவில் விரைவாக பயணம் செய்ய பைக் டாக்சிகள் பொதுமக்களுக்கு பெரிதும் உதவுகின்றன. பாதுகாப்பு குறித்த கவலைகளை கருத்தில் கொண்டு, பைக் டாக்சிகளை போக்குவரத்து வாகனங்களாக பதிவு செய்து, ஒப்பந்த அடிப்படையில் இயக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மாநில அரசு, தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தின்படி, பைக் டாக்சி சேவைக்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கூடுதல் நிபந்தனைகளை வகுக்கலாம் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு ஆயிரக்கணக்கான பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு வாழ்வாதார நம்பிக்கையை அளித்துள்ளது.