Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 01 Mar 2026

மதுரை – புதுச்சேரி பயணம்: பிரதமர் மோடி திறப்பு விழா மற்றும் தேர்தல் பொதுக்கூட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் முக்கிய அரசியல் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். குஜராத் மாநில தலைநகர் ஆமதாபாதிலிருந்து தனி விமானத்தில் வந்து, விமான நிலையத்தில் தமிழக கவர்னர் ரவி, அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

சென்னையில் கிண்டி லோக் பவனில் தங்கிய பிரதமர், இன்று காலை ஹெலிகாப்டரில் புதுச்சேரி செல்கிறார். அங்கு பல்வேறு அரசு திட்டங்களின் துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, தஞ்சை விமானப்படை தளம் வழியாக தனி விமானத்தில் மதுரை செல்கிறார். மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தரிசனம் செய்த பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

இந்நிகழ்வில் அ.தி.மு.க. பொதுச்செயலர் பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். பொதுக்கூட்டத்தை முடித்து, பிரதமர் டில்லி திரும்புகிறார்.

இதேவேளை, ரயில்வே துறையின் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் மேம்படுத்தப்பட்ட பல ரயில் நிலையங்களை பிரதமர் திறந்து வைக்கிறார். காரைக்குடி, மணப்பாறை, மெராப்பூர், பொள்ளாச்சி, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாரூர் உள்ளிட்ட நிலையங்களில் ரூ.105 கோடி மதிப்பில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

மேலும், சென்னையில் கடற்கரை – எழும்பூர் இடையே 4.3 கி.மீ நீள நான்காவது புதிய ரயில் பாதை ரூ.273 கோடி செலவில் அமைக்கப்பட்டு, அதையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்