Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 18 Apr 2019

தீரன் சின்னமலை 263-ஆவது பிறந்தநாளில் அவரது கனவுகளை நனவாக்க வேண்டும்!

இந்தியாவின் தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், வீரத்தின் விளைநிலமாக விளங்கியவருமான தீரன் சின்னமலையின் 263 -ஆவது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தமது மக்களும், நாடும் யாருக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கக்கூடாது என்பதற்காக வெள்ளையர்களை எதிர்த்து தொடர்ந்து போர்களை நடத்திய தீரன் சின்னமலையின் வீரத்தையும், தீரத்தையும் அவரது பிறந்தநாளில் போற்றுகிறேன்.

ஆங்கிலேயர்கள் அதிநவீனப் போர்க்கருவிகளையும், ஆயிரக்கணக்கில் படைகளையும் வைத்திருந்த நிலையில், திப்புசுல்தான், கட்டபொம்மன், மருதுபாண்டியர்கள் மற்றும் மராத்திய மன்னர்களுடன் துணை சேர்ந்து போர்களை நடத்தி பல போர்களில் வெள்ளையர்களை வென்றவர் தீரன் சின்னமலை ஆவார். ஆயிரம் அலெக்சாண்டர்களுக்கு இணையான வீரம் கொண்ட தீரன் சின்னமலையை போரில் வீழ்த்த முடியாது என்பதால் சூழ்ச்சி மூலம் அவரை வெள்ளையர்கள் கைது செய்து ஓடாநிலையில் தூக்கிலிட்டனர்.

தீரன் சின்னமலையிடம் வீரத்திற்கு இணையாக ஈரமும் இருந்தது. ஏழை மக்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக இளம் வயதிலேயே மைசூர் மன்னரின் வரிப் பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு வழங்கியவர் தீரன் சின்னமலை ஆவார். அவரது வரலாறு அனைவரும் அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அதனால், அவரது வாழ்க்கை வரலாற்றை பள்ளிக்கூடப் பாடத்திட்டத்தில் தமிழக அரசு சேர்க்க வேண்டும்.

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு மணிமண்டபம் கட்டப்பட வேண்டும் என்று நான் தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன். சட்டப்பேரவையிலும் இதுதொடர்பாக பா.ம.க.வினர் தொடர்ந்து குரல் கொடுத்தனர். அதன்பயனாகவே ஓடாநிலையில் தீரனுக்கு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டது.

வெள்ளையர்கள் இந்த நாட்டை ஆளக்கூடாது; நல்லவர்கள் தான் நாட்டை ஆள வேண்டும் என்பதே தீரன் சின்னமலையின் நோக்கமாக இருந்தது. ஆனால், இன்று நல்லவர்களை வீழ்த்தி விட்டு, ஆட்சிக்கு வர கொள்ளையர்கள் துடிக்கின்றனர். அவர்களின் சதியை முறியடித்து மத்திய, மாநில நல்லாட்சிகள் தொடர்வதற்காக உழைக்க தீரன் சின்னமலையின் 263 ஆவது பிறந்த நாளில் நாம் உறுதியேற்போம்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்