Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 01 Feb 2026

உற்பத்தி வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மீது கவனம் செலுத்தும் மத்திய பட்ஜெட் – நிர்மலா சீதாராமன்

புதுடில்லி:
மத்திய அரசின் 2026–27 நிதியாண்டு பட்ஜெட்டில் உற்பத்தித் திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புகள் உருவாக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பார்லிமென்டில் பட்ஜெட் தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக் கொள்ளவும், மேலும் வேகமான வளர்ச்சியை எட்டவும் தேவையான கட்டமைப்பு மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார். மேற்கொள்ளப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

21-ஆம் நூற்றாண்டு முழுவதும் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு இயங்குவதால், பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் தொழில்நுட்பம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். நகர்ப்புற வளர்ச்சிக்காக ஒவ்வொரு நகரத்திற்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி நிதி வழங்கப்படும் என்றும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

செமிகண்டக்டர் திட்டத்தின் கீழ் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், ரூ.40,000 கோடி மதிப்பிலான மின்னணு கூறுகள் உற்பத்தித் திட்டம் இந்தியாவை மின்னணு துறையில் தன்னிறைவு அடையச் செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், அரிய வகை தாதுக்கள் மற்றும் கனிமங்களை கண்டறிந்து பயன்படுத்துவதற்கான வழித்தடங்கள் அமைக்கப்படும் என்றும், இதன் மூலம் வெளிநாட்டு இறக்குமதி சார்பு குறையும் என்றும் தெரிவித்தார்.

ஒடிசா, கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், இது இந்திய பொருளாதாரத்தில் பலதரப்பட்ட நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். அதேபோல், இறக்குமதி வரிவிலக்கு வழங்கப்படும் அரிய நோய்களின் பட்டியலில் மேலும் ஏழு நோய்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்றும், நேரடி மற்றும் மறைமுக வரி தொடர்பான பல முக்கிய முன்மொழிவுகளும் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்