சிங்கப்பூர், மலேஷியாவில் தைப்பூசம் விழா: பால்குடம், காவடியுடன் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் தைப்பூசத் திருவிழா தமிழ்நாட்டில் நடைபெறுவது போலவே பாரம்பரிய உற்சாகத்துடன் விமரிசையாக கொண்டாடப்பட்டது. சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து தண்டாயுதபாணி கோவிலுக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் பால்குடம் ஏந்தி சென்றனர்.
இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட 20 முதல் 30 சதவீதம் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். சுமார் 19 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 350-க்கும் மேற்பட்டோர் காவடி எடுத்தும் முருகனை வழிபட்டனர். வாத்திய இசையுடன் நடைபெற்ற ஊர்வலம் பக்தர்களை பரவசப்படுத்தியது.
இந்த விழாவில் சிங்கப்பூர் கலாசாரம், இளைஞர்கள் மற்றும் மனித வளத்துறை இணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், மனைவி ரத்திகா வேலாயுதனுடன் இணைந்து பால்குடம் எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மலேஷியாவில் பத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச விழா கோலாகலமாக நடைபெற்றது. கோலாலம்பூரில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.