உலகளவில் கவனம் ஈர்க்கும் இந்தியா ஏ.ஐ. மாநாடு – அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
புதுடில்லி: இந்தியாவில் நடைபெற உள்ள இந்தியா ஏ.ஐ. மாநாடு மற்றும் கண்காட்சி உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டில்லியில் வரும் பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறும் இந்த மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் முன்னேற்றங்கள், அதன் எதிர்கால பயன்பாடுகள் மற்றும் தொழில்துறை தாக்கங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா ஏ.ஐ. மாநாடு இதுவரை உலகளவில் நடைபெற்ற மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக உருவெடுத்து வருவதாக கூறினார். ஏற்கனவே 70 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் ஏஐ உள்கட்டமைப்பில் செய்யப்பட்டுள்ளன என்றும், ஏஐ தொடர்பான இறுதி செய்யப்பட்ட பாடத்திட்டங்கள் 500 பல்கலைக்கழகங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளன என்றும் தெரிவித்தார்.
இதன் மூலம் நாட்டில் ஏஐ திறமை மேம்பட்டு, தொழில்நுட்ப துறைக்கு வலுவான மனிதவள அடித்தளம் உருவாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.