மலப்புரம் காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து – 90% பகுதி எரிந்து சேதம்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் அருகே உள்ள அரவங்காரா பகுதியில் செயல்பட்டு வந்த காலணி உற்பத்தி தொழிற்சாலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் இருந்து தீப்பற்றியதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ வேகமாக பரவியதால் திரூர், பொன்னானி, மஞ்சேரி, மீஞ்சந்தா மற்றும் பெரிந்தல்மன்னா பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
தொழிற்சாலையை சுற்றி குடியிருப்பு பகுதிகள் அதிகமாக இருந்ததால், தீ அப்பகுதிகளுக்கு பரவாமல் தடுக்க தீயணைப்புத்துறையினர் தீவிரமாக போராடினர். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இத்தீ விபத்தில் தொழிற்சாலையின் 90 சதவீதம் பகுதி முற்றிலும் எரிந்து நாசமடைந்துள்ளது. தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியாத நிலையில், மின்கசிவே காரணமாக இருக்கலாம் என தீயணைப்புத்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஏற்பட்ட பொருளாதார சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.