பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியர்கள் குண்டு கட்டாக கைது
சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய போது உயிரிழந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணனுக்கு நீதி கோரி, பகுதிநேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், கடந்த 8ம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.2,500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். ஆனால், பணி நிரந்தரம் வழங்கப்படாமல் ஊதிய உயர்வை ஏற்க முடியாது என கூட்டு இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்தனர்.
இதனையடுத்து, பொங்கல் பண்டிகையான இன்று எட்டாவது நாளாக, 500க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் டி.பி.ஐ. அலுவலகம் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, உயிரிழந்த ஆசிரியர் கண்ணனுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், திமுக தேர்தல் வாக்குறுதி எண் 181ஐ நிறைவேற்ற வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டக்காரர்களை கைது செய்ய போலீசார் முயன்றபோது, ஆசிரியர்கள் மற்றும் போலீசாரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, பகுதிநேர ஆசிரியர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்து, பல்வேறு வாகனங்களில் ஏற்றி கிண்டி, தாம்பரம், கிளாம்பாக்கம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இறக்கி விட்டனர்.