Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 20 Jan 2026

சபரிமலை தங்கம் மாயமான வழக்கு: 21 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை, விசாரணை தீவிரம்

திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான வழக்கு தொடர்பாக, தமிழகம், கேரளா மற்றும் பெங்களூருவில் மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

2019 ஆம் ஆண்டு சபரிமலையில் நடைபெற்ற புனரமைப்பு பணிகளின்போது, கருவறை முன்பிருந்த துவாரபாலகர் சிலைகள் மற்றும் கருவறை கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் புதுப்பிக்கப்பட்டன. தங்க முலாம் பூசி மீண்டும் பொருத்தியபோது, துவாரபாலகர் சிலைகளில் இருந்து சுமார் 4 கிலோ தங்கம் மாயமானது என்பது பின்னர் தெரியவந்தது. இதேபோல் கருவறை கதவுகளிலும் தங்கம் திருடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வழக்கில் பராமரிப்பு பணிகளுக்கு பொறுப்பாக இருந்த உன்னி கிருஷ்ணன் போத்தி, சபரிமலை நிர்வாக அதிகாரிகள், தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர்கள், ஆணையர்கள் மற்றும் பெல்லாரி ஜுவல்லரி உரிமையாளர் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கேரளாவில் உன்னிகிருஷ்ணனின் வீடு, திருவனந்தபுரம் தேவஸ்வம் போர்டு தலைமையகம், முன்னாள் தலைவர் பத்மகுமாரின் வீடு மற்றும் சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தங்க முலாம் பூசும் நிறுவனம் உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்