Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 14 Jan 2026

பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஒளிவிட்ட மகரஜோதி – சபரிமலையில் உச்சம் தொட்ட பக்தி

சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு காலத்தின் உச்ச நிகழ்வான மகரஜோதி தரிசனம் இன்று மாலை பொன்னம்பலமேட்டில் நிகழ்ந்தது. மாலை 6.42 மணியளவில் மகரஜோதி தென்பட்டதையடுத்து, சபரிமலையெங்கும் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற சரணகோஷம் முழங்கியது.

இதற்கு முன்னதாக மகர சங்கரம பூஜை மாலை 3.08 மணிக்கு நடைபெற்றது. சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் புண்ணிய வேளையில், திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து கொண்டு வரப்பட்ட நெய்தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் விக்ரகத்தில் நெய்யபிஷேகம் செய்யப்பட்டது.

பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை சரங்குத்தியை அடைந்து, பின்னர் சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. தந்திரி மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மூன்று முறை மகரஜோதி ஒளிவிட்டு பிரகாசித்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்து ஆனந்தமடைந்தனர். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்