பிஷ்னோய் கும்பல் குற்றச்சாட்டு: கனடா போலீஸ் அறிக்கைக்கு இந்தியா கடும் மறுப்பு
புதுடில்லி:
கனடாவில் செயல்படும் காலிஸ்தான் ஆதரவாளர்களை குறிவைக்க, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் இந்தியா தொடர்பில் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை சம்பவத்தில் இந்திய முகவர்கள் தொடர்புடையவர்கள் என கனடா குற்றம் சாட்டியதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே கடும் ராஜதந்திர பதற்றம் நிலவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக தூதர்கள் வெளியேற்றம், பயண எச்சரிக்கைகள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக கனடா போலீஸ் துறை வெளியிட்ட அறிக்கையில், கனடாவில் வசிக்கும் தெற்காசிய சமூகத்தைச் சேர்ந்த நபர்களின் தகவல்கள் இந்தியாவை சேர்ந்த சிலரால் சேகரிக்கப்பட்டு, அவை பிஷ்னோய் கும்பலுடன் பகிரப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தகவல்களை பயன்படுத்தி கொலை, மிரட்டல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த இந்திய அரசு, இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், அரசியல் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டவை என்றும் கூறி, கனடா எந்த உறுதியான ஆதாரத்தையும் வழங்கவில்லை என வலியுறுத்தியுள்ளது.