Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 03 Mar 2026

சபரிமலை பெண்கள் அனுமதி தீர்ப்புக்கு எதிராக புதிய பிரமாணப் பத்திரம் – தேவஸ்வம் போர்டு முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் தொடர்பான பெண்கள் அனுமதி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை அய்யப்பன் கோவில், நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யும் முக்கிய தலமாகும். அய்யப்பன் நைஷ்டிக பிரம்மச்சாரியாக இருப்பதால், 10 வயதுக்குட்பட்ட சிறுமியரும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே சபரிமலைக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அப்போது ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசு அந்த உத்தரவை அமல்படுத்த முயன்றது. இதனால் பக்தர்கள் மற்றும் பல இந்து அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

போலீஸ் பாதுகாப்புடன் சில பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததையடுத்து, அந்நேர தந்திரி கண்டரரு ராஜீவரரு கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தங்கம் மாயமான விவகாரத்தையடுத்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, புதிய தலைவராக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடுவுக்குள் தேவஸ்தானத்தின் நிலைப்பாட்டை விளக்கும் வகையில் புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும். சபரிமலையில் பழைய மரபு நடைமுறையே தொடர வேண்டும் என்பது தேவஸ்வம் போர்டின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்