Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 02 Mar 2026

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்த முதல் பிரதமர் மோடி

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படையான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்-க்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். இந்த வருகையின் மூலம், இக்கோயிலுக்கு நேரில் வந்து வழிபட்ட முதல் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

மாலை 4:12 மணியளவில் காவி சால்வை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்து கோயிலுக்கு வந்த பிரதமருக்கு மேளதாளத்துடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஸ்தானிக சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதையுடன் அவரை வரவேற்றனர்.

பிரதமர் நேரடியாக மூலஸ்தானத்திற்கு சென்று, குன்றத்து குமரனை மனமுருகி வழிபட்டார். அவரது பெயரில் சிறப்பு அர்ச்சனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனத்திற்குப் பிறகு, கோயிலின் கொடிமரம் மண்டபத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கினார்.

கோயில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் முருகன் மற்றும் தெய்வானை திருக்கல்யாண அலங்காரப் படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. மாலை 4:32 மணியளவில் அவர் திருப்பரங்குன்றத்தில் இருந்து புறப்பட்டார்.

இந்த வருகையின்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்