முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி காலமானார் | புனே
புனே: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி இன்று (ஜனவரி 06) காலமானார். அவருக்கு வயது 81.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவரான சுரேஷ் கல்மாடி, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
1944ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி புனேயில் பிறந்த சுரேஷ் கல்மாடி, காங்கிரஸ் கட்சியில் நீண்ட அரசியல் அனுபவம் பெற்றவர். ரயில்வே துறைக்கான மத்திய இணை அமைச்சராகவும், புனே மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் அவர் பதவி வகித்துள்ளார். மேலும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் தலைவராக இருந்து விளையாட்டு நிர்வாகத்தில் தேசிய அளவில் முக்கிய பங்கு வகித்தார்.
2011ஆம் ஆண்டு விளையாட்டு நிதி முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், பல சர்ச்சைகளுக்கிடையிலும் அரசியல் மற்றும் விளையாட்டு துறைகளில் செல்வாக்குடன் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரேஷ் கல்மாடியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு இன்று புனேயில் நடைபெற உள்ளது. அவருக்கு மனைவி, மகன், மருமகள், இரண்டு திருமணமான மகள்கள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர்.