வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – ஜனவரி 9, 10 தேதிகளில் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
சென்னை: வங்கக்கடலின் தெற்கு மத்திய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் நாளை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக, தமிழக டெல்டா மாவட்டங்களில் வரும் ஜனவரி 9ம் தேதி கனமழை பெய்யக்கூடும். மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் சில இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதால், மலைப்பகுதிகளுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி 9ம் தேதி மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜனவரி 10ம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.