Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 15 Jan 2026

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம் – ரூ.8 லட்சம் கார் பரிசு

மதுரை அவனியாபுரத்தில் தைத்திருநாளை முன்னிட்டு இன்று நடைபெற்ற பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடந்தது. மொத்தம் 12 சுற்றுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 937 காளைகள் களமிறங்கின.

இந்த ஜல்லிக்கட்டில் மதுரை வலையங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் 22 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்பட்டது. அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 17 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தையும், ரஞ்சித் 16 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இரண்டாம் இடம் பெற்ற கார்த்திக்கு இருசக்கர வாகனம் பரிசாக அளிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் மாடுபிடி வீரர்கள் திமிறி வரும் காளைகளை வீரத்துடன் எதிர்கொண்டு பிடித்தனர். போட்டியின் போது 60 பேருக்கு காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க 3,090 காளைகளும், 1,849 மாடுபிடி வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர். காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

மதுரை மாவட்ட கலெக்டர் முன்னிலையில் வாடிவாசல் பகுதியில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

மேலும் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட விருமான்டி பிரதர்ஸ்க்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்