வங்கதேசத்தில் தொடரும் சிறுபான்மையினர் மீதான வன்முறை: ஹிந்து ஆட்டோ டிரைவர் கத்தியால் கொலை
டாக்கா:
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் மர்ம கும்பலால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாட்டில் நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
கொல்லப்பட்டவர் 28 வயதான சமீர் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வந்ததாகவும், கார்த்திக் குமார் தாஸ் – ரினா ராணி தம்பதியின் மூத்த மகன் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீரை கொலை செய்த மர்ம நபர்கள், அவரது ஆட்டோவை திருடிக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கு முன்னரும் வங்கதேசத்தில் ஹிந்து சமூகத்தினருக்கு எதிரான பல வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் மைமென்சிங் நகரில் ஜவுளி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 30 வயதான தீபு சந்திர தாஸ் என்பவர் மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். அவரின் உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்டு தீ வைத்து எரித்ததாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து நிகழும் இத்தகைய தாக்குதல்களால், வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்துக்கள் எண்ணிக்கை தற்போது எட்டாக உயர்ந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன. சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.