பாங்காக்கில் இருந்து கடத்தல்; டில்லி விமான நிலையத்தில் ரூ.10 கோடி போதைப் பொருள் சிக்கியது
டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையில், ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாங்காக்கில் இருந்து டில்லிக்கு வந்த விமானத்தில் பயணித்த இந்தியர் ஒருவரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருந்ததால், அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அந்த பயணி தனது லக்கேஜ்களை சோதனைக்கு அளிக்காமல் தவிர்க்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகள் அவரது லக்கேஜ்கள் மற்றும் கைப்பைகளை சோதனை செய்தனர். அதில் பல பாக்கெட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வக பரிசோதனையில், அவை ரூ.10 கோடி மதிப்புள்ள மரிஜூவான என உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட பயணியும் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தலுக்கு பின்னால் செயல்படும் "குருவி"கள் மற்றும் சர்வதேச போதைப் பொருள் வலையமைப்பு குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், பஞ்சாப் மாநிலத்தில் போலீசார் நடத்திய தனிப்படை சோதனையில், 42 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நான்கு கையெறி குண்டுகள், துப்பாக்கி மற்றும் பெருமளவு வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
இந்த வழக்கில் அமிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹெராயின் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது மற்றும் இதில் தொடர்புடையவர்கள் யார் என்பதைக் கண்டறிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.