4வது டி20: பேட்டர்கள் ஏமாற்றம் | இந்தியா 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி | துபே 65
விசாகப்பட்டினம்:
இந்தியா–நியூசிலாந்து இடையிலான 4வது டி20 போட்டியில் இந்திய பேட்டர்கள் தொடர் சரிவை சந்திக்க, நியூசிலாந்து அணி 50 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. சூப்பர் துவக்கம் பெற்ற நியூசிலாந்து அணியில் செய்பெர்ட் 25 பந்தில் அரைசதம் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். நடுவே விக்கெட்டுகள் விழுந்தாலும், மிட்செல் நிலைத்து விளையாட, நியூசிலாந்து 20 ஓவரில் 215/7 ரன் குவித்தது.
பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சூர்யகுமார், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். ரிங்கு சிங் 39 ரன் எடுத்த நிலையில், ஷிவம் துபே 15 பந்தில் அரைசதம் அடித்து ஆறுதல் அளித்தார்.
இறுதியில் இந்திய அணி 18.4 ஓவரில் 165 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.