Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 27 Feb 2026

ஜேஎன்யு மாணவர்கள் பேரணி முயற்சி; 51 பேர் கைது, டில்லியில் பதற்றம்

Jawaharlal Nehru University (ஜேஎன்யு) மாணவர்கள் புதிய யுஜிசி விதிகளை அமல்படுத்த வேண்டும், ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவர வேண்டும் மற்றும் துணைவேந்தர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மத்திய கல்வித்துறை அமைச்சகத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றனர்.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்ட் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மாணவர்கள் பேரணியாக நகர முயன்றபோது, போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

இதன் போது மாணவர்கள் தடுப்புகளை சேதப்படுத்தியதுடன், கற்கள், காலணிகள் மற்றும் கொடிக்கம்புகளை வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். சிலர் போலீசாருடன் தள்ளுமுள்ளு செய்ததுடன் கடித்தும் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஜேஎன்யு மாணவர் சங்க நிர்வாகிகள் நால்வர் உள்பட மொத்தம் 51 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையை எதிர்த்து டில்லியில் மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அசம்பாவிதங்களைத் தவிர்க்க பல்கலை வளாகத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, பிப்ரவரி மாத தொடக்கத்தில் அம்பேத்கர் நூலகத்தில் இருந்த கண்காணிப்பு உபகரணங்களை சேதப்படுத்திய விவகாரத்தில் கம்யூனிஸ்ட் ஆதரவு மாணவர் சங்க நிர்வாகிகள் ஐந்து பேர் நீக்கப்பட்டிருந்தனர். அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இந்த போராட்டம் வெடித்ததாக பல்கலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்