தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவக்கம்: 8.27 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கியுள்ளது. மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தேர்வில் மொத்தம் 8,27,475 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
7,545 பள்ளிகளில் இருந்து 7,99,692 பள்ளி மாணவர்கள், 27,783 தனித்தேர்வர்கள் மற்றும் 281 சிறைக் கைதிகள் தேர்வில் பங்கேற்கின்றனர்.
மாநிலம் முழுவதும் 3,412 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்கள் 7,465 பேர் உதவியாளர் உதவியுடன் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு நேர்மையாக நடைபெற 44,624 ஆசிரியர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்கும் வகையில் 4,540 பேர் கொண்ட பறக்கும் படையும் செயல்படுகிறது.
மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் மொபைல் போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டால் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்வு தொடர்பான சந்தேகங்கள் மற்றும் புகார்களுக்கு 14417 என்ற இலவச எண் மற்றும் 94983 83075 / 94983 83076 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.