சென்னையில் போராட்டம்: 840 ஊராட்சி செயலர்கள் சஸ்பெண்ட், 845 பேர் இடமாற்றம் – பல துறை ஊழியர்கள் கைது
சென்னையில் 23 நாட்கள் போராட்டம் நடத்திய ஊராட்சி செயலர்களில் 840 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, 845 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பில், முதல்வர் உறுதியளித்த ஓய்வூதிய திட்டத்தில் தங்களை சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 4ம் தேதி முதல் போராட்டம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து, கடந்த 18ம் தேதி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், கடந்த இரண்டு நாட்களில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 840 பேரை சஸ்பெண்ட் செய்து, மேலும் 845 பேரை இடமாற்றம் செய்துள்ளதாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் ஊராட்சி செயலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 158 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், நான்காம் நிலை ஊதியத்துக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க கோரி மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை எழிலகம் வளாகத்தில் 500க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் சந்திக்காததால் காமராஜர் சாலையில் மறியல் நடைபெற்றது; பலர் கைது செய்யப்பட்டனர்.
மக்கள் நலப்பணியாளர்கள் சங்கமும் பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தியது. சுகாதார செவிலியர்கள் சம்பளம் மற்றும் ஊதிய உயர்வு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், யு.ஜி.சி. உத்தரவின்படி 57,000 ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல துறைகளில் அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவது மாநில அரசுக்கு சவாலாக மாறியுள்ளது.