₹5.42 கோடி அளவுக்கு வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாக இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது லஞ்ச ஒழிப்பு வழக்கு
சென்னை திருமங்கலம், வெல்கம் காலனி பகுதியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராஜலட்சுமி தற்போது எழும்பூரில் உள்ள விபச்சார தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு மது விலக்கு அமலாக்கப்பிரிவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.
அவருக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக சென்னை ஆலந்தூரில் அமைந்துள்ள லஞ்ச ஒழிப்பு துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் ஆரம்ப கட்ட விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, ராஜலட்சுமியின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், அவருடைய சொத்து மதிப்பைச் சார்ந்த ஆவணங்களும் ஆய்வு செய்யப்பட்டன.
அந்த ஆய்வின் போது, 2017 ஜூன் 1 முதல் 2025 ஜூன் 30 வரை உள்ள காலகட்டத்தில், ராஜலட்சுமி வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.42 கோடி மதிப்பிலான சொத்து சேர்த்திருப்பது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்து, மேலதிக விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணை முடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.