சென்னையில் திமுக பொதுக்கூட்டம்: வடமாநிலத்தவர், கஞ்சா குறித்த அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு
சென்னையில் “தமிழகம் தலைகுனியாது” என்ற தலைப்பில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பரசன் பேசும்போது, வடமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் தமிழகத்திற்கு வருவதாகவும், அவர்கள் கஞ்சா கொண்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் கஞ்சா பழக்கம் அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய திமுக அரசு போதைப்பொருள் ஒழிப்பில் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார். இந்தியாவின் சில மாநிலங்களில் கஞ்சாவிற்கு தடை இல்லை என்றாலும், தமிழகத்தில் தடை அமலில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி சோமு, இருமொழிக் கொள்கையில் கல்வி கற்றவர்களே வெளிநாடுகளில் உயர்ந்த நிறுவனங்களில் பணிபுரிவதாகவும், மத்திய பாஜக அரசு தமிழகத்திற்கு பட்ஜெட்டில் அநீதி செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி சட்டம் ஒழுங்கு குறித்து பேச தகுதி இல்லை என்றும், அவரது ஆட்சிக் காலத்தில் துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கோடநாடு கொலை, பொள்ளாச்சி பாலியல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததாகவும் விமர்சித்தார்.