அமைச்சர்கள் தொடர்புடைய கருங்கல் குவாரிகளுக்கு ‘வரன்முறை’ திட்டம்? லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மணல் மற்றும் எம்-சாண்ட் லாரி உரிமையாளர்களின் ஒருங்கிணைந்த நல சம்மேளனம், மாநில அரசின் புதிய ‘வரன்முறை’ திட்டம் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தனியார் பட்டா நிலங்களில் கனிமவளத் துறை வழங்கும் உரிமத்தின் அடிப்படையில் கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கனிமங்கள் வெட்டப்படுகின்றன என்ற புகார்கள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், குவாரி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆனால் அரசியல் தொடர்புடைய குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்படுவதில்லை அல்லது விதிக்கப்பட்டாலும் வசூலிக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், 2015ஆம் ஆண்டை அடிப்படையாக கொண்டு விதிமீறல் குவாரிகளை ‘வரன்முறை’ செய்யும் திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இதில், ஒரு கன மீட்டருக்கு ரூ.25 கட்டணம் செலுத்தினால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி எடுக்கப்பட்ட கனிமங்களுக்கு அபராதத்துடன் தொகை வசூலிக்கும் நடைமுறை இதில் இல்லை என கூறப்படுகிறது.
மத்திய அரசின் சட்ட, விதிமுறைகளுக்கு முரணாக இந்த திட்டம் அமைந்துள்ளதாகவும், இதனால் அரசுக்கு சுமார் ரூ.30,000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
அமைப்பின் தலைவர் ஆர். பன்னீர்செல்வம் கூறுகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல குவாரிகள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன என்றார். அளவுக்கு அதிகமாக கனிமங்கள் வெட்டப்பட்டாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் பல மாவட்ட ஆட்சியர்கள் அபராதம் விதிக்கும் அதிகாரம் இல்லை என்று பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.
தற்போது ஒவ்வொரு குவாரிக்கும் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 கோடி வரை விதிக்கப்பட்ட அபராதங்கள் வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன என்றும் கூறினார்.
தனிநபர்கள் பெயரில் உரிமம் வழங்கப்பட்டாலும், முன்னாள் மற்றும் தற்போதைய அமைச்சர்களின் ஆதரவாளர்களே குவாரிகளை நடத்துகின்றனர் என்றும், புதிய வரன்முறை திட்டம் விதிமீறியவர்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.