சென்னை :
சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட, “இந்தி எதிர்ப்பு போரில் ஈவெரா பித்தலாட்டம்” என்ற நூலை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம், தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் குறித்த புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஈழத்து சிவானந்த அடிகள் எழுதிய “இந்தி எதிர்ப்பு போரில் திராவிட பித்தலாட்டம்” என்ற நூல், 1965-ஆம் ஆண்டிலேயே வெளிவந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் தொடக்க வரலாறு, அதன் அரசியல் பின்னணி, மற்றும் ஈ.வெ.ரா. அந்த இயக்கத்தில் இணைந்த விதம் குறித்த விமர்சனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த நூல் கடந்த அறுபது ஆண்டுகளாக பலமுறை மறுபதிப்புகள் கண்டுள்ளது.
இந்தாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு, தமிழம் பதிப்பகம் இதன் மறுபதிப்பை புதிய தலைப்பில் வெளியிட்டது. ஆனால், வெளியான அடுத்த நாளே, போலீசார் புத்தகக் கண்காட்சி வளாகத்துக்குள் நுழைந்து, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அனைத்து பிரதிகளையும் பறிமுதல் செய்தனர்.
சட்டப்படி அச்சிட்டு வெளியிடப்பட்ட ஒரு நூலை, நீதிமன்ற உத்தரவு இன்றி போலீசார் பறிமுதல் செய்ய அதிகாரம் இல்லை என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட தரப்பினர் புகார் அளித்தால்தான் விசாரணை, நோட்டீஸ், விளக்கம் போன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் இச்சம்பவத்தில் அவை எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“அரசுக்கு நெருக்கமான சிலரின் அழுத்தத்தின் காரணமாக, கருத்து சுதந்திரத்தை புறக்கணித்து போலீசார் இத்தகைய தடாலடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்” என பதிப்பகத்தினர் கூறுகின்றனர்.
கருத்து சுதந்திரம் குறித்து அடிக்கடி பேசும் ஆளும் தரப்பு, தங்களுக்கு விருப்பமில்லாத கருத்துகளை அடக்க அதிகாரத்தை பயன்படுத்துவது, இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்து, எந்த சட்டத் தடையும் இல்லாமல் வாசிக்கப்பட்ட ஒரு நூலை இப்போது பறிமுதல் செய்திருப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை மதிப்புகளையே கேள்விக்குள்ளாக்குவதாக பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்