மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் உள்ள தும்மநாயக்கன்பட்டி கிராமத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 300 ஆண்டுகள் பழமையான விநாயகர் மற்றும் கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இரண்டு ஏக்கர் 40 செண்ட் நிலத்தில் அமைந்துள்ளது.
கோவிலில் திருப்பணி மேற்கொள்ள மாநில மற்றும் மாவட்ட வல்லுநர் குழுவின் அனுமதி பெறப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் திருப்பணிக்கு அனுமதி வழங்கியது. இதற்கிடையில் அப்பகுதி முஸ்லிம் சமூகத்தினர் கோவில் திருப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் கோவில் பரம்பரை அறங்காவலர் மகேஸ்வரன் மற்றும் கிராம மக்கள் சார்பில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கோவில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறும் வரை காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக சாகுல் ஹமீது என்ற நபர் கோவில் திருப்பணியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் கோவில் திருப்பணிக்கு அனுமதி வழங்கியது.
மேலும் பிப்ரவரி 18ஆம் தேதி நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டது. இருப்பினும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோவிலுக்குள் நுழைந்து தர்ணா போராட்டம் நடத்தியதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
இந்த எதிர்ப்பினால் கோவில் திருப்பணி இன்னும் தொடங்கப்படவில்லை என கூறப்படுகிறது. நீதிமன்ற உத்தரவை மீறி கோவில் திருப்பணியை தடுக்கக் கூடாது என்றும் தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்