Logo

மகரம்

உலகத்தை அறிந்து கொள்ள
செய்திகள் • 18 Feb 2026

இலவச அரசியலை சீமான் கடும் விமர்சனம்

திருச்சி: மாற்றத்தை விரும்பும் மக்களுக்கான மாநாடு வரும் 21ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இந்த மாநாடு தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

திருச்சியில் நடைபெறும் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் கூறினார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய சீமான், மக்கள் அரசியலில் மாற்றத்தை விரும்புகின்றனர் என்றும், சுற்றுச்சூழல் பாதிப்பு மிகப்பெரிய பிரச்னையாக மாறிவிட்டதாகவும் தெரிவித்தார். “மாற்றம் என்பது சொல் அல்ல; செயல்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆட்சி முறை மாற்றம் தேவை:
வேட்பாளர்கள் மொத்தமாக அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் பிரசாரத்தை முழுவீச்சில் தொடங்குவோம் என தெரிவித்த அவர், தற்போதைய ஆட்சி முறை அரசியலை எதிர்க்கிறோம் என்றார். தமிழகத்தில் பல திட்டங்கள் கடன் பெற்று நிறைவேற்றப்பட்டவை என்றும், கடன் சுமை அதிகரித்துள்ள நிலையிலும் அரசு இலவசங்களை வழங்குவது சரியானதல்ல என்றும் விமர்சித்தார்.

அரசு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் தரம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். அறிவை வளர்க்கும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் என்றும், நெசவாளிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் சிரமத்தில் உள்ளனர் என்றும் கூறினார்.

இலவச அரசியல் குற்றச்சாட்டு:
“கடையில் குவாட்டர் இலவசம் என்று விற்க முடியுமா? பண்டிகைக்கு 10 குவாட்டர் இலவசம் என்று அரசு அறிவிக்குமா? விவசாயிகள் உழைத்து விளைவிக்கும் அரிசி மட்டும் ஏன் இலவசம்?” என அவர் கேள்வி எழுப்பினார். பொங்கலுக்கு வேஷ்டி, சேலை இலவசம் வழங்கும் அரசு, மற்ற பொருட்களை ஏன் இலவசமாக வழங்காது என்றும் அவர் விமர்சித்தார்.

அறிவு மற்றும் மருத்துவத்தை உலக தரத்தில் வழங்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என சீமான் தெரிவித்தார். அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பிள்ளைகள் அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கிறார்களா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். தேர்தல் நேரத்தில் பணம் வழங்குவது போன்ற அரசியல் நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.

நிதி பற்றாக்குறை நிலவிக்கொண்டிருக்கும்போது இலவச திட்டங்களை அறிவிப்பது பொருளாதார ரீதியாக சரியானதல்ல என சீமான் கருத்து தெரிவித்தார்

- நமது நிருபர் -

வாசகர்கள் கருத்துகள்