அண்ணா பல்கலை பதிவாளர் நியமனம் சர்ச்சை: நிர்வாக அனுபவம் இல்லை என பாலகுருசாமி குற்றச்சாட்டு
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் தற்போதைய பதிவாளர் நியமனம் குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
முன்னாள் துணைவேந்தர் இ. பாலகுருசாமி, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில், பல்கலைக்கழகம் சமீப காலமாக பல நிர்வாக சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக இந்த பிரச்சினைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பதிவாளரின் அலட்சியம் மற்றும் நிர்வாக அனுபவக் குறைபாடே இச்சிக்கல்களுக்கு காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். வழக்கமாக அண்ணா பல்கலையின் நான்கு வளாக கல்லூரி முதல்வர்களில் ஒருவரையோ அல்லது ஐந்து மூத்த பேராசிரியர்களில் ஒருவரையோ பதிவாளராக தேர்வு செய்வது நடைமுறையாக உள்ளது. ஆனால், இம்முறை அந்த நடைமுறை பின்பற்றப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
மேலும், பதிவாளர் எந்த துறையிலும் தலைவராக பணியாற்றிய அனுபவம் இல்லாதவர் என்றும், அவரின் ஒரே தகுதி அரசியல் தொடர்பு மட்டுமே என தகவல்கள் கூறுகின்றன. அவர் தி.மு.க. முன்னாள் அமைச்சரின் மருமகன் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலை தொடர்ந்தால், கல்வி நிறுவனத்தின் தரம் மேலும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என பாலகுருசாமி எச்சரித்துள்ளார்.