சி.கே. நாயுடு டிராபி (23 வயதுக்குட்பட்டோர்) நான்கு நாள் கிரிக்கெட் தொடரின் பைனலில் மகாராஷ்டிராவை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) நடத்தும் இந்த தொடரில் 'சி' பிரிவில் விளையாடிய தமிழக அணி, லீக் சுற்றில் 7 போட்டிகளில் 5 வெற்றி மற்றும் 2 டிரா பெற்று 84 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது.
பின்னர் காலிறுதியில் பஞ்சாப் அணியையும், அரையிறுதியில் சத்தீஸ்கர் அணியையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா அணியை சந்தித்தது.
முதல் இன்னிங்சில் மகாராஷ்டிரா 238 ரன்கள் எடுத்தது. தமிழக அணி முதல் இன்னிங்சில் 334 ரன்கள் எடுத்து 96 ரன்கள் முன்னிலை பெற்றது.
இரண்டாவது இன்னிங்சில் மகாராஷ்டிரா அணி 161 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தமிழகத்தின் சச்சின் ரதி மற்றும் விக்னேஷ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழக அணி 20 ஓவர்களில் 67/3 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கேப்டன் பூபதி வைஷ்ண குமார் மற்றும் ஆதிஷ் அவுட் ஆகாமல் இருந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். கிரண் கார்த்திகேயன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
மேலும் இந்த தொடரில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் சச்சின் ரதி 10 போட்டிகளில் 55 விக்கெட்டுகள் எடுத்து தொடர் நாயகன் விருதையும் பெற்றார்.
கருத்துகள்
இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் கருத்து சொல்லுங்கள்!
கருத்து சொல்லுங்கள்