சமூக வலைதளங்களுக்கு வயது வரம்பு? டீப் பேக் அச்சுறுத்தலுக்கு மத்திய அரசு கடுமையான நடவடிக்கை
புதுடில்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டில் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் Ashwini Vaishnaw, சமூக வலைதளங்களின் பயன்பாட்டிற்கு வயது வரம்பு விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தெரிவித்தார்.
அவர் கூறுகையில், ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டீப் பேக் (Deepfake) வீடியோக்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வருகின்றன. குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானதாகும். இதனை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான சட்ட நடவடிக்கைகள் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், Netflix, YouTube, Meta, X உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இந்திய அரசின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
டீப் பேக் தொடர்பான பிரச்சினையை பார்லி குழு விரிவாக ஆய்வு செய்துள்ளதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.